ஈழத்தமிழ் பாரம்பரியம் மற்றும் தேசியத்தின் அடையாளங்களை மீள்கொண்டுவந்த இளந்தளிர் 2015 நிகழ்ச்சி

‘இளந்தளிர்’ 2005, 2006, 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்டது. இந்த வருடமும் ஈழத்தமிழரின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வண்ணமும் தமிழ் தேசியத்தை வளர்க்கும் முகமாகவும் இந் நிகழ்வு அமைந்து இருந்தது. 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி அதாவது பத்து வருடங்களுக்கு முன் இதே நாளில் தமிழ் இளையோர் அமைப்பின் முதலாவது நிகழ்வாக இளந்தளிர் இடம்பெற்றது. இன்று நாம் ஒரு தசாப்தம் கடந்து நிற்கின்றோம், இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளராக இருக்கும் திரு செல்வராஜா கஜேந்திரன் அண்ணா அவர்கள் அன்று சிறப்பு விருந்தினராக கலந்து எங்கள் நிகழ்வினை தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு எஸ் ஜெயானந்தமூர்த்தி ஐயா அவர்கள் 2006 இலும் தொடர்ந்து பல முக்கிய பிரமுகர்களுடன் நடந்தேறிய இளந்தளிர் நிகழ்வு முற்றிலும் தாயகம் தேசியம் என்ற அடிப்படையில் நடக்க தவறியதில்லை.

ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு கருப்பொருளுடன் எமது தாயகம் சார்ந்த கண்காட்சியும் காட்சிப்படுத்தப்படும். 2009க்கு பின்பு தேசியக்கொடியினை லண்டனில் பயன்படுத்த தடை என்ற வதந்தி பரவலாக முடக்கி விடப்பட்ட சமயம் எமது தேசியக்கொடியின் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் விளக்கவும் அத்துடன் தேசியக்கொடியினை பாவிக்க எந்த ஒரு சட்ட சிக்கலும் இல்லை எங்களுக்கு என்று காட்டும் வண்ணமும் நாம் 2011 ஆம் ஆண்டு Walthamstow Assembly Hall இல் தமிழீழத் தேசியக்கொடியினை முன் கம்பத்தில் ஏற்றி இளந்தளிர் நிகழ்வினை சிறப்பாக செய்து முடித்தோம்.

2009 ஆண்டுக்கு பிறகு புலம்பெயர்ந்து வாழும் இளய சமுதாயத்திடம் பாரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக வளர்ந்து வரும் இளய சமுதாயத்துக்கு தமிழீழத்துக்கான போராட்ட வரலாற்றை கற்றுகொடுப்பது. இதன்நோக்கமாக 2009க்கு முதல் தமிழீழம் எப்படி ஒரு வலுவான அரசாங்க கட்டமைப்புகள் இயங்கியது என்று பறைசாத்தும் வண்ணம் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் தமிழீழ வங்கி, கல்வி, போக்குவரத்து போன்ற ஒரு மாதிரி வடிவங்கள் வைக்கப்பட்டு இருந்தது. விடுதலை புலிகளின் இராணுவ கட்டமைப்புகளும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது இது மிகவும் பார்வையாளர்களை கவர்ந்தது.

அத்துடன் தமிழ் பாடசாலை மாணவர்கள், நடனக்குழுக்கள் மற்றும் தமிழ் இளையோரின் நடனம், பாடல், கவிதை, பேச்சுக்கள் மற்றும் நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மாலைப் பொழுதுபோக்கு ஏற்ற நிகழ்ச்சியாக இது அமைந்து இருந்தது. இவை அனைத்தும் ஈழத்தமிழ் அடையாளம், தேசிய சின்ன , வரலாறு மற்றும் பாரம்பரியத்தை வெளிபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டு இருந்தது..

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலை புலிககளின் மிது விடுத்திருந்த தடைக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்காடிய லதன் சுந்தரலிங்கம் சிறப்பு விருந்தினராக வந்து சிறப்புரை ஆற்றியிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் மற்றும் தமிழ் இளையர் அமைப்புக்கு உதவிய அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம் .

You may also like...