சிறீலங்கா கிறிக்கெட்டைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் – குழப்பம் விளைவிக்க முயன்ற சிங்களவர்கள்

தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்குமாறு கோரி பிரித்தானிய தமிழ் இளையோர் நேற்று (28-06-2011) லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

காலை 11:00 மணிமுதல் கிறிக்கெட் பார்க்கச் சென்ற மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களை இளையோர்கள் வழங்கல் செய்துகொண்டிருக்க, இளையோர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மாலை 5:00 மணி முதல் மக்களும் இணைந்து கொண்டனர்.

தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு பிரித்தானிய தமிழ் இளையோர்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற சிங்களவர்கள் இளையோர்கள் மீது எச்சில் துப்பி, தகாத வார்த்தைப் பிரயோகங்களால் திட்டியதுடன், தமிழீழ தேசிக் கொடியை அகற்ற வேண்டும் என பிரித்தானிய காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இளையோர் வைத்திருந்த கொடி தடை செய்யப்படவில்லை எனவும், அதனை அவர்கள் வைத்திருக்கும் உரிமை உண்டு எனவும் கூறிய பிரித்தானிய காவல்துறையினர், தாம் அந்தக் கொடியை அகற்றுமாறு கோரிக்கை விடுக்க மாட்டோம் என திட்டவட்டமாகக் கூறியிருந்தனர்.

சிங்கள காடையர்களின் நடைமுறை மற்றும் தமிழ் இளையோர்கள் வன்முறையைத் தவிர்த்த காரணத்தினால், சிங்களவர்கள் மீது கோபம்கொண்ட பிரித்தானிய காவல்துறையினர், குழப்பம் விழைவித்த சிங்களவர்களின் பெயர், விபரங்களைப் பதிவுசெய்து, மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்து அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

முன்னர் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களின்போது மக்கள் தொகையைக் கண்டு அருகே செல்ல அஞ்சும் சிங்களவர்கள், இப்பொழுது அருகில் சென்று வன்முறையைப் பிரயோகிக்கும் அளவிற்கு துணிச்சல் பெற்றுள்ளமைக்கு, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் தமிழ் மக்களின் எண்ணிக்கையே காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரி தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவரும் பிரித்தானிய தமிழ் இளையோர்கள், இதற்கு முன்னதாக இந்த மாதம் மட்டும் அக்ஸ்பிறிஜ், கார்டிஃப், லோர்ட்ஸ், பிறிஸ்ரல் போன்ற பல இடங்களில் ஐந்து தடவைகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

இன்று கடும் மழையின் மத்தியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்த தமிழ் இளையோர்கள், எதிர்வரும் ஜூலை 3ஆம் நாள் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் மற்றொரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தவுள்ளனர்.

You may also like...